Friday, August 6, 2010

நீ இல்லாத போது...

உனக்காக
எப்போதும் வாங்கும்
இரண்டு முடி மல்லிகையை
இன்று
பூக்காரக் கிழவி
விற்காமல் எடுத்துப் போவது
எத்தனைச் சோகமானது!

*****************************
நீ பொரி போட்டுப்

பசியாற்றிய
கோயில் குளத்தின் மீன்கள்
இன்று தண்ணீர் குடித்துத்
தண்ணீர் குடித்து
உன்னைத் தேடிய தவிப்பு
எத்தனை துயரமானது!

*****************************
நீ வராத
வெறுமையில்
பூங்காவின் காவலாளிக்கு
ஒரு புன்னகையைக் கூட
திருப்பித் தராமல்
இன்று நான் வெளியேறுவது
எத்தனை உறுத்தலானது.

- பழநிபாரதி


No comments: