Monday, August 16, 2010

காதலின் பின் கதவு - பழநிபாரதி

உனக்காக வைத்திருந்த
முத்தத்தில்
ஃப்ளோரைட் வாசம்!

உனக்காகப் பறித்த பூவில்
டீசல் தூசி!

உனக்காக வாங்கிய
வாழ்த்து அட்டையில்
மரத்தின் இரத்தம்!

எனது உலகத்திலிருந்து
ஏதுவுமில்லை உனக்கு!

காற்றை
அழுக்குபடுத்தாமல் ஓடும்
உனது குட்டிக் கார்!

வன்முறை அறியாத
இராணுவ வீரன்!

சிரிக்கக் கற்றுக்கொடுக்கும்
சீனத் தங்கை!

விபத்துகளைச் சந்திக்காத
விமானம்
ரயில்!

மதங்களற்ற
உனது பொம்மைகளின்
உலகத்திலிருந்து
முடிந்தால் கொடு
எனக்கொரு சிரிப்பை!

################################


இசைத் தட்டின் ஞாபகத்தில்
கடிகாரத்தில் படுத்துக் கிடக்கும்
முட்கள் நாம்!

பசி தீர்ந்த நகங்கள் பற்கள்
அபரிமிதமாய் விட்டுச் சென்ற
இறைச்சித் துண்டின் தனிமை
நம் காலம் !

தழுவும் அலைகளின் லயிப்பில்
பேசத் திணறிய நம் பாறைகளின்
உன் பிம்பங்கள்
உருவாக முடியாமல்
உடைந்து நொறுங்கின!

வண்ணத்துப் பூச்சிகள்
மாமிசம் உண்ணும் கனவுகளுக்கு
நீ உன் உறக்கத்தை
விட்டுக் கொடுத்திருக்கிறாய்!

கோபுரத்தில் புறாக்களும்
பிரகாரங்களில் வௌவால்களும்
ஒரே கோயிலில்
எப்படி வாழ்கின்றன என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

No comments: